அரியானா சட்டசபை தேர்தல்: வேட்புமனுவை வாபஸ் பெற்ற ஆளும் பாஜக வேட்பாளர் - காரணம் என்ன?

அரியானா சட்டசபை தேர்தலில் சர்சா தொகுதியில் பாஜக வேட்பாளர் ரோஸ்டஷ் ஜங்ரா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

Update: 2024-09-16 11:45 GMT

சண்டிகர்,

அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அம்மாநிலத்தின் சர்சா தொகுதியில் பாஜக வேட்பாளராக ரோஸ்டஷ் ஜங்ரா களமிறக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் ரோஸ்டஷ் ஜங்ரா தனது வேட்புமனு தாக்கலை இன்று வாபஸ் பெற்றுள்ளார். சர்சா தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வருபவர் கோபால் கண்டா. அரியானா லோக்ஹிட் கட்சி தலைவரான கோபால் கண்டா பாஜக அரசுக்கு ஆதரவு அளித்திருந்தார்.

தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ. கோபால் கண்டா மீண்டும் சர்சா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால், கோபால் கண்டாவுக்கு பாஜக ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சர்சா தொகுதி பாஜக வேட்பாளர் ரோஸ்டஷ் ஜங்ரா தனது வேட்புமனுவை இன்று வாபஸ் பெற்றுள்ளார். இதன் மூலம் கோபால் கண்டாவுக்கு பாஜக ஆதரவு அளிப்பது உறுதியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்