கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் சித்ரவதை செய்ததால் தனியார் நிறுவன பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் சித்ரவதை செய்ததால் தனியார் நிறுவன பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.

Update: 2023-07-04 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு கெங்கேரி அருகே ஹெக்கனஹள்ளியை சேர்ந்தவர் பவித்ரா. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். ஏற்கனவே திருமணமான இவர், தனது முதல் கணவரை விவாகரத்து செய்திருந்தார். இந்த நிலையில், பவித்ராவுக்கும் அவருடன் வேலை பார்த்து வந்த சேத்தன் கவுடா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பவித்ரா, சேத்தன்கவுடாவை 2-வதாக திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேத்தன் கவுடாவுக்கும், பூஜா கவுடா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் பவித்ராவுக்கு தெரியவந்துள்ளது. இதனால், அவர் கணவரையும், பூஜா கவுடாவையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. மேலும் சேத்தன்கவுடா தனது கள்ளக்காதலி பூஜா கவுடாவுடன் சேர்ந்து மனைவி பவித்ராவை அடித்து, உதைத்து

சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் பவித்ரா மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பவித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வதாக பதிவு செய்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவித்ராவின் தாய் பத்மம்மா, அவரது வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது பவித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து பத்மம்மா கதறி அழுதுள்ளார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கெங்கேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பவித்ரா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கி உள்ளது.

அந்த கடிதத்தில், நான் சேத்தன் கவுடாவை கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி 2-வதாக திருமணம் செய்துகொண்டேன். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த எங்கள் வாழ்க்கையில் பூஜா கவுடாவால் விரிசல் ஏற்பட்டது. சேத்தன் கவுடாவும், பூஜா கவுடாவும் தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த நான், அவர்களை கண்டித்தேன். ஆனால் அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தினர். மேலும் அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர். எனது சாவுக்கு கணவர் சேத்தன் கவுடாவும், பூஜா கவுடாவும் தான் காரணம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உருக்கமாக கூறி இருந்தார்.

இதுகுறித்து பவித்ராவின் தாய் பத்மம்மா கெங்கேரி போலீசில் சேத்தன்கவுடா, பூஜா கவுடா மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்