பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று சதுர்த்தி விழா கொடியேற்றம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2024-08-28 21:41 GMT

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடைவரை கோவிலான இங்கு, விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விழா இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து இரவு மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 2-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) இரவில் சிம்ம வாகனத்திலும், 3-ம் நாள் இரவில் பூத வாகனத்திலும் சுவாமி வீதி உலா வருகிறார்.

4-ம் நாள் இரவு கமல வாகனத்திலும், 5-ம் நாள் இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6-ம் நாள் விழாவாக வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு கற்பகவிநாயகர், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

7-ம் நாள் விழாவில் 4-ந் தேதி இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாள் விழாவான 5-ந் தேதி இரவு வெள்ளி குதிரை வாகனத்திலும் சுவாமி வீதி உலா வருகிறார். 9-ம் நாள் விழாவான 6-ந் தேதி காலை சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் மாலையில் தேரோட்டமும் நடக்கிறது. மேலும் அன்றையதினம் மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

10-ம் நாள் விழாவாக 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் காலையில் கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. மேலும் காலையில் தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் திருக்குளத்தில் எழுந்தருளுகிறார்.

இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் காரைக்குடி மெய்யப்ப செட்டியார் மற்றும் பூலாங்குறிச்சி முத்துராமன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்