சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகள் வெற்றி


சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகள் வெற்றி
x

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டிய்ல் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகள் வெற்றி பெற்றது.

சென்னை,

சென்னை ஓபன் ஏ.டி.பி.சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-4, 7-5 என்ற நேர்செட்டில் பிரடெரிகோ பெரீரா சில்வா (போர்ச்சுகல்) நிகோலஸ் மொரினோ டி அல்போரான் (அமெரிக்கா) இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல்-முகுந்த் சசிகுமார் இணையை எதிர்த்து ஆடிய யூ ஹிசோவ் சூ (சீன தைபே)-கிறிஸ்டோபர் ருங்காட் (இந்தோனேசியா) ஜோடி 6-7 (12-14), 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் போட்டியில் இருந்து விலகியது. இதனால் சுமித் நாகல் ஜோடி கால்இறுதியை எட்டியது.

இன்னொரு ஆட்டத்தில் ஜாய் கிளார்க் (இங்கிலாந்து)-அர்ஜூன் காதே (இந்தியா) இணை 3-6, 6-3, 10-7 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டேன் கெல்லி-டேன் ஸ்வீனி ஜோடியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார்-விஷ்ணு வர்தன், அனிருத் சந்திரசேகர்-விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடிகள் தோல்வி கண்டு வெளியேறின.

ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 132-வது இடத்தில் இருக்கும் சீனதைபேயின் சுன் சின் செங் 2-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் நிகோலஸ் மொரினோ அல்போரானிடம் அதிர்ச்சிகரமாக தோற்று நடையை கட்டினார்.

மற்ற ஆட்டங்களில் ஆர்தூர் காசாஸ் (பிரான்ஸ்), டேன் ஸ்வீனி (ஆஸ்திரேலியா), யாசுதகா உஷியமா (ஜப்பான்) உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.


Next Story