புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ் அணிக்கு 9-வது வெற்றி- புள்ளி பட்டியலில் முதலிடம்


புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ் அணிக்கு 9-வது வெற்றி- புள்ளி பட்டியலில் முதலிடம்
x

Image Tweeted By ProKabaddi

தினத்தந்தி 15 Nov 2022 4:41 PM GMT (Updated: 15 Nov 2022 4:42 PM GMT)

தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் வெற்றி பெற்றது.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணி 32-22 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி தரப்பில் அபாரமாக விளையாடிய அர்ஜுன் தேஷ்வால் 1 போனஸ் புள்ளி உட்பட 13 புள்ளிகளை குவித்து அசத்தினார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் பெங்களூரு புல்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் 49-38 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியின் சார்பில் பரத் 17 புள்ளிகளும், நீரஜ் நர்வால் 13 புள்ளிகளும் குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 14 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்று 51 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.



Next Story