காமன்வெல்த் விளையாட்டு: இந்திய குத்துச்சண்டை அணி அறிவிப்பு


காமன்வெல்த் விளையாட்டு: இந்திய குத்துச்சண்டை அணி அறிவிப்பு
x

காமன்வெல்த் விளையாட்டு போட்டிற்கான இந்திய குத்துச்சண்டை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டியாலா,

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டிகள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்று நடந்தது.

தகுதி போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவரான அமித் பன்ஹால் 51 கிலோ எடைப்பிரிவில் சர்வீசஸ் வீரர் தீபக்கை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தார். இதே போல் உலக போட்டியில் பதக்கம் வென்றவரான ஷிவ தபா 63.5 கிலோ எடைப்பிரிவில் 5-0 என்ற கணக்கில் மனிஷ் கவுசிக்கை வீழ்த்தி தனது இடத்தை உறுதி செய்தார். மற்ற எடைப் பிரிவிலும் வீரர்களின் செயல்பாட்டு அடிப்படையில் இந்திய குத்துச்சண்டை அணி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

அமித் பன்ஹால் (51 கிலோ), முகமது ஹூசாமுத்தீன் (57 கிலோ), ஷிவ தபா (63.5 கிலோ), ரோகித் டோகாஸ் (67 கிலோ), சுமித் (75 கிலோ), ஆஷிஷ் குமார் (80 கிலோ), சஞ்ஜீத் (92 கிலோ) மற்றும் சாகர் (92 கிலோவுக்கு மேல்). இந்திய பெண்கள் அணியினருக்கான தகுதி சுற்று அடுத்த வாரம் நடத்தப்படும்.


Next Story