' அணியை மேம்படுத்துவதற்கான சிறந்த களமாக ஸ்பெயின் தொடர் உள்ளது'- இந்திய ஆக்கி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்


 அணியை மேம்படுத்துவதற்கான சிறந்த களமாக ஸ்பெயின் தொடர் உள்ளது- இந்திய ஆக்கி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்
x

image courtesy;instagram/harmanpreet_13

தினத்தந்தி 25 July 2023 6:44 AM GMT (Updated: 26 July 2023 9:35 AM GMT)

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி ஸ்பெயினில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றுள்ளது.

டெல்லி,

ஸ்பெயின் ஆக்கி கூட்டமைப்பின் 100-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 4 நாடுகளுக்கு இடையிலான ஆக்கித் தொடர் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க இந்திய அணியையும் தேர்வு செய்து இருந்தது. தொடரில் இந்தியா,இங்கிலாந்து,நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த ஆக்கித் தொடர் ஜூலை 25 முதல் 30 வரை நடைபெற இருக்கிறது.

இந்தத் தொடரில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி இங்கிலாந்து,நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக மோத உள்ளது. இந்தியப் பெண்கள் ஆக்கி அணி இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுடன் மோத உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். பெண்கள் ஆக்கி அணிக்கு சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஸ்பெயின் தொடர் குறித்து இந்திய ஆண்கள் ஆக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கூறுகையில்,

'ஸ்பெயின் தொடர் வலுவான அணிகளுக்கு எதிராக அணியின் உத்திகளைச் சரிசெய்வதற்கும் , திறன்களை அளவிடுவதற்கும் சிறந்த களம். மேலும் இந்தத் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் வரவிருக்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கித் தொடருக்கு முன் அணியின் தரத்தை அறிய உதவும். மேலும் இந்தத் தொடரில் சிறந்த வெற்றி பெற முயற்சி செய்வோம்' என்று கூறி உள்ளார்.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி தொடரை நடத்தும் ஸ்பெயின் ஆண்கள் அணியை எதிர்கொள்கிறது. இந்திய பெண்கள் ஆக்கி அணி நாளை இங்கிலாந்து அணி உடன் மோத உள்ளது.


Next Story