தொடரை வெல்லுமா இந்திய அணி ? வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
லோகேஷ் ராகுல் 2-வது டெஸ்டிலும் கேப்டனாக பணியாற்றுவார்.
மிர்பூர்,
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. 2 டெஸ்ட் தொடரில் சட்டோகிராமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 188 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும்.
இந்த டெஸ்டிலும் கேப்டன் ரோகித் சர்மா ஆடவில்லை. கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை . முதல் டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை. லோகேஷ் ராகுல் 2-வது டெஸ்டிலும் கேப்டனாக பணியாற்றுவார்.
வங்காளதேச அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.