நீங்கள் ஏன் சிரிப்பதில்லை..?- அஸ்வினின் கேள்விக்கு கம்பீர் அளித்த பளிச் பதில்


நீங்கள்  ஏன் சிரிப்பதில்லை..?- அஸ்வினின் கேள்விக்கு கம்பீர் அளித்த பளிச் பதில்
x

image courtesy: PTI

ஏன் நீங்கள் அடிக்கடி சிரிப்பதில்லை? என்று ஒரு நிகழ்ச்சியில் கம்பீரிடம் ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கவுதம் கம்பீர், 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதில் முக்கிய பங்காற்றினார். ஓய்வுக்கு பின் ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த அவர், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு ஆலோசகாராக செயல்பட்டு வருகிறார்.

அவருடைய வழிகாட்டுதலில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அதிரடியான முடிவுகளை எடுத்து கொல்கத்தா வெற்றி நடை போட்டு வருகிறது. அவருடைய தலைமையில் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா, பைனலுக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. மேலும் 2014 காலகட்டத்தில் ஓப்பனிங்கில் அசத்திய சுனில் நரைனை இந்த வருடம் மீண்டும் கவுதம் கம்பீர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கியுள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அணி வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, களத்திலும் சரி எல்லா சூழ்நிலையிலும் கம்பீர் என்றுமே ஒரே ரியாக்சன்தான் கொடுப்பார்.

இந்நிலையில் ஏன் நீங்கள் அடிக்கடி சிரிப்பதில்லை? என்று ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டார். அதற்கு கவுதம் கம்பீர் பதிலளித்தது பின்வருமாறு:- "எனக்கு புரியவில்லை. சில சமயங்களில் சிரிக்காததால் இவர் சீரியஸானவர், எரிச்சலுடன் இருக்கக்கூடியவர், எப்போதும் இறுக்கமான முகத்துடன் இருப்பவர் என்று மக்கள் பேசுகின்றனர். இருப்பினும் அந்த மக்கள் நான் சிரிப்பதை பார்ப்பதற்காக மைதானத்திற்கு வருவதில்லை. அவர்கள் தங்களுடைய அணி வெற்றி பெறுவதைப் பார்ப்பதற்காகவே வருகின்றனர்.

அது மாதிரியான தொழிலில்தான் நாங்கள் இருக்கிறோம். எனவே சிரிப்பை வைத்து என்னால் உதவ முடியாது. நான் பொழுதுபோக்கில் இல்லை. நான் பாலிவுட் நடிகர் கிடையாது. நான் கார்ப்பரேட் கிடையாது. நான் கிரிக்கெட்டர். உடைமாற்றும் அறைக்கு வெற்றியாளராக திரும்புவதே என்னுடைய வேலையாகும். வெற்றி பெறும் உடைமாற்றும் அறையே மகிழ்ச்சி நிறைந்த அறையாக இருக்கும். எனக்காக போராடுவதற்கும் எனது அணியினருக்காக போராடுவதற்கும் எதிரணியை முறியடிப்பதற்கும் விளையாட்டின் விதிமுறைக்குள் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு.

அதற்காக சிலர் அவர் மிகவும் கடினமானவர் குறிப்பிட்ட வழியில் விளையாடுகிறார் என்று சொல்வார்கள். ஆம் நான் அப்படி செய்கிறேன். ஏனென்றால் அது எனது திறனை சிறப்பாக செய்ய உதவுகிறது. அது என்னுடைய குணாதிசயம். என்னைப் பொறுத்த வரை அது ஒரு ஆவேசம். நான் உண்மையில் வெற்றி பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருக்கிறேன். அதில் என்ன தவறு? நான் வெற்றிக்காக வெறித்தனமாக இருக்கிறேன். அதுவே எனக்குள்ள பிரச்சினை" என்று நச்சென பதிலளித்துள்ளார்.


Next Story