டி.என்.பி.எல்.: நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி


டி.என்.பி.எல்.: நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி
x

Image Courtesy : @TNPremierLeague

நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நெல்லை,

8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, திருப்பூர் அணி முதலில் செய்தது.

தொடக்கம் முதல் திருப்பூர் அணி சிறப்பாக விளையாடியது. நெல்லை அணியின் பந்துவீச்சை திருப்பூர் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு திருப்பூர் அணி 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ராதாகிருஷ்ணன் அரைசதம் அடித்தார். மேலும் துஷார் ரெஜா 41 ரன்கள் எடுத்தார். நெல்லை அணியில் அதிகபட்சமாக சிலம்பரசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 190 ரன்கள் என்ற இலக்குடன் நெல்லை அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் நிலைத்து நின்று ஆடி 51 ரன்கள் குவித்தார். அதே போல் ரித்திக் ஈஸ்வரன் அரைசதம் கடந்து 59 ரன்கள் எடுத்தார். சோனு யாதவ் 40 ரன்கள் சேர்த்தார்.

அதே சமயம் மறுபுறம் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், நெல்லை அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருப்பூர் அணியில் அதிகபட்சமாக நடராஜன் 4 விக்கெட்டுகளையும், ராமலிங்கம் ரோகித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Next Story