டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை அணியை வீழ்த்தி திருச்சி வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை அணியை வீழ்த்தி திருச்சி வெற்றி
x

image courtesy: TNPL twitter

திருச்சி அணி 19.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.

நெல்லை,

டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அருண் கார்த்திக் - மொஹித் ஹரிஹரன் களமிறங்கினர்.

இதில் ஹரிஹரன் 1 ரன்னிலும் அவரை தொடர்ந்து களமிறங்கிய குருசாமி 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அருண் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். அவருக்கு ஈஸ்வரன் ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிரடியாக விளையாடிய அருண் கார்த்திக் 84 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெல்லை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அருண் கார்த்திக் 51 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். திருச்சி தரப்பில் சரவணகுமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாஷீம் அகமது மற்றும் கே ராஜ்குமார் இருவரும் சிறப்பாக விளையாடி இருவரும் முறையே 27 ரன்கள் மற்றும் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய அர்ஜூன் மூர்த்தி 1 ரன்னில் அவட்டானார். அதிரடியாக விளையாடிய ஷியாம் சுந்தர் மற்றும் ஜாபர் ஜமால் இருவரும் முறையே 31 மற்றும் 39 ரன்கள் குவித்து அவுட்டாகினர்.

இறுதியில் திருச்சி அணி 19.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதையடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆர் ராஜ்குமார் 31 ரன்களுடனும், அந்தோணி தாஸ் 1 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.


Next Story