டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா.. கோலி புதிய மைல்கல்..!


டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா.. கோலி புதிய மைல்கல்..!
x

Image Courtesy: AFP

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கோலி, ரோகித் ஆகியோர் புதிய சாதனை படைத்துள்ளனர்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சூர்யகுமார் யாதவ் அதிரடியால் மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டு 20 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் எடுத்தது.

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அதிரடி கட்டிய விராட் கோலி இன்றைய போட்டியில் 11 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டியில் 62 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை (965) பின்னுக்கு தள்ளி கோலி 2-வது இடத்துக்கு (989 ரன்கள்) முன்னேறி இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் 11 ரன்களை கடந்த போது டி20 உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களை அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஜெயவர்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஜெயவர்தனே சாதனையை முறியடிக்க கோலிக்கு மேலும் 16 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த போட்டியின் மூலம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டி ரோகித் சர்மாவிற்கு ஒட்டுமொத்தமாக டி20 உலக கோப்பையில் 36-வது போட்டியாகும். இதன் மூலம் அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் அவர் திலகரத்ன தில்ஷனை பின்னுக்கு தள்ளி (35 போட்டிகள்) முதலிடம் பிடித்துள்ளார்.


Next Story