டி20 உலகக்கோப்பை; வங்காளதேசம் அபார பந்துவீச்சு...இலங்கை 124 ரன்கள் சேர்ப்பு


டி20 உலகக்கோப்பை; வங்காளதேசம் அபார பந்துவீச்சு...இலங்கை 124 ரன்கள் சேர்ப்பு
x

Image Courtesy: AFP

இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 47 ரன்கள் எடுத்தார்.

டல்லாஸ் ,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 15-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குசல் மெண்டிஸ் 10 ரன், அடுத்து களம் இறங்கிய காமிந்து மெண்டிஸ் 4 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து பதும் நிசாங்கா உடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிசாங்கா 47 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய சரித் அசலங்கா 19 ரன், வனிந்து ஹசரங்கா 0 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து டி சில்வா உடன் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி சில்வா 21 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து தசுன் ஷனகா களம் இறங்கினார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 47 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி ஆட உள்ளது.


Next Story