ரோகித் சர்மா அதிரடி சதம்..! ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!


ரோகித் சர்மா அதிரடி சதம்..! ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!
x

ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

புதுடெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் ஹஷ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.ஹஷ்மதுல்லா ஷஹிதி 80 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை எடுத்துள்ளது.இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது

தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். தொடக்கம் முதல் ரோகித் அதிரடியாக ஆடினார். இஷான் கிஷன் மறுமுனையில் நிலைத்து ஆடினார் ,

ரோகித் சர்மா பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்தார்.அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் .பின்னர் ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

இவருடன் களமிறங்கிய இஷான் கிஷன் தன் பங்கிற்கு 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.அடுத்து களமிறங்கிய விராட் கோலி அரைசதம் அடித்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை ஆடினார்.

இதன் மூலம் இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிவில் விராட் கோலி 55 ரன்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 25 ரன்களையும் குவித்தனர்.இந்திய அணிக்கு இது 2வது வெற்றியாகும் .


Next Story