தோனி போல ரோகித்தும் அதை செய்தால் டி20 உலகக்கோப்பையை வெல்லலாம் - ஹர்பஜன்


தோனி போல ரோகித்தும் அதை செய்தால் டி20 உலகக்கோப்பையை வெல்லலாம் - ஹர்பஜன்
x

2007-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தோனி அனுபவமற்ற புதிய கேப்டனாக இருந்ததால் சீனியர்களின் ஆலோசனைகளை கேட்டு வெற்றிகரமாக செயல்பட்டதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்திய அணி முதலும் கடைசியாக 2007-ம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன் பின் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் 2007-ல் எம்.எஸ். தோனி அனுபவமற்ற புதிய கேப்டனாக இருந்ததால் சேவாக், கம்பீர் மற்றும் தம்மைப் போன்ற சீனியர்களின் ஆலோசனைகளை கேட்டு வெற்றிகரமாக செயல்பட்டதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எனவே தனியாளாக கோப்பையை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து ரோகித் சர்மாவும் மற்ற வீரர்களிடம் தேவையான ஆலோசனைகளை கேட்டு செயல்பட வேண்டும் என்று ஹர்பஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் சொந்த சாதனைகளுக்காக விளையாடினால் இந்திய அணியால் உலகக்கோப்பை வெல்ல முடியாது என்றும் எச்சரிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:- "இந்த விஷயம் பலருக்கு தெரியாது. தோனி புதிய கேப்டனாக இருந்ததால் எங்களுடைய ஆதரவு தேவைப்பட்டது. குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிக்கு முன்பாகவும் களத்திலும் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சேர்ந்து திட்டங்களை வகுப்போம்.

எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நான் முக்கியமான 18-வது ஓவரை வீசினேன். அதில் நாங்கள் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தது எங்களைக் காப்பாற்றியது. இப்போது போல் அந்த காலத்தில் பேட்ஸ்மேன்கள் ஒரு ஓவரில் 25 ரன்கள் அடிக்க மாட்டார்கள். நீங்கள் அணியாக சேர்ந்து விளையாடும்போது போட்டிகளை வெல்லலாம். உண்மையில் தோனி கேட்பதில் மகத்தானவர். அவர் அனைவரது பேச்சை அடிப்படையாக வைத்து அணிக்கு சாதகமான முடிவை எடுப்பார்.

இப்போது கேள்வி என்னவெனில் அதேபோல ரோகித் சர்மா செய்வாரா? அவரால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது. வெற்றி என்பது நாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது. எனவே சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அணியாக ஒன்று சேர்ந்து விளையாடினால் வெல்ல முடியும். ஆனால் சொந்த சாதனையில் கவனம் செலுத்தினால் அனைத்தும் கடினமாகி விடும்" என்று கூறினார்.


Next Story