எதிர்பார்ப்புகளை ஒதுக்கிவிட்டு களத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும் - பும்ரா


எதிர்பார்ப்புகளை ஒதுக்கிவிட்டு களத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும் - பும்ரா
x

Image Courtesy: @BCCI

தினத்தந்தி 21 Aug 2023 3:40 AM GMT (Updated: 21 Aug 2023 7:19 AM GMT)

அயர்லாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் 33 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

டப்ளின்,

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது போட்டியில் டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் 33 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய கேப்டன் பும்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது,

வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய நாள் பிட்ச் கொஞ்சம் உலர்ந்திருந்தது. அதனால் இரண்டாம் பாதியில் பிட்ச் மித வேகத்தில் இருக்கும் என்று கருதினோம். அதன் காரணமாகவே முதலில் பேட்டிங் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினோம்.

அது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் கடினமாக இருக்கும். ஏனென்றால் அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் ஏற்றிக் கொண்டால் நீங்கள் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். எதிர்பார்ப்புகளை ஓரம்வைத்து விட்டு சுதந்திரமாக களத்தில் விளையாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story