உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து விலகிய ஆஸி.முன்னணி வேகப்பந்து வீச்சாளர்...!


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து விலகிய ஆஸி.முன்னணி வேகப்பந்து வீச்சாளர்...!
x

Image Courtesy: @ICC

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது.பந்து வீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய முன்னணி வீரர் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் மைக்கேல் நெசர் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவாக கருதப்பட்டாலும் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்ற வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story