ஜெய்ஸ்வால் அதிரடி...முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா


ஜெய்ஸ்வால் அதிரடி...முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா
x

image courtesy; twitter/@BCCI

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியா விளையாடி ரன்களை குவித்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக களமிறங்கிய சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் வெறும் 47 பந்துகளிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 23 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 119 ரன்கள் அடித்து வலுவான நிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 76 ரன்களிலும், கில் 14 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


Next Story