ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து 13-வது வெற்றி


ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து 13-வது வெற்றி
x

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசிப்பது இது 8-வது நிகழ்வாகும்.

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் ஹராரேயில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 40.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பிராட் இவான்ஸ் 33 ரன்களுடன் (29 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். எக்ஸ்டிரா வகையில் அவர்களுக்கு 9 வைடு உள்பட 25 ரன்கள் கிட்டியது.

பின்னர் 190 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் 81 ரன்களுடனும் (113 பந்து, 9 பவுண்டரி), சுப்மான் கில் 82 ரன்களுடனும் (72 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். ஜிம்பாப்பே பவுலர்கள் 21 வைடு உள்பட 29 ரன்களை எக்ஸ்டிரா வகையில் வாரி வழங்கினர். 3 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் தீபக் சாஹர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 12.45 மணிக்கு நடைபெறும்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ச்சியாக பெற்ற 13-வது வெற்றி இதுவாகும். குறிப்பிட்ட அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் குவித்ததில் இந்தியாவின் சாதனையாக இது பதிவானது. இதற்கு முன்பு வங்காளதேசத்துக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து 12 ஆட்டங்களில் வென்றிருந்தது.

அதே போல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசிப்பது இது 8-வது நிகழ்வாகும். இதில் ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஆட்டங்களும் அடங்கும்.


Next Story