அஸ்வினுக்கு புகழாரம் சூட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா


அஸ்வினுக்கு புகழாரம் சூட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா
x

image courtesy: AFP

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அஸ்வினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகன் விருது வென்றார். குறிப்பாக முதல் இன்னிங்சில் 144 - 6 என இந்தியா தடுமாறியபோது சதமடித்து 113 ரன்கள் குவித்த அவர், 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி பேசியிருந்த ரோகித் சர்மா போட்டி முடிந்து கூறியதாவது : - ரவிச்சந்திரன் அஸ்வினை நினைத்தால் நிச்சயம் பெருமையாகவே இருக்கிறது. ஏனெனில் தற்போதுதான் ஐபிஎல் தொடரில் அஸ்வின் சிறப்பாக விளையாடியிருந்தார். அதன்பின்னர் சில காலம் இந்திய அணிக்காக விளையாடாத அவர் நேரடியாக டி.என்.பி.எல் தொடரில் விளையாடினார். டி.என்.பி.எல். தொடரில் அவரது பேட்டிங்கை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் அவர் பேட்டிங் செய்து வந்தார்.

டி.என்.பி.எல். தொடரில் அவர் பேட்டிங் செய்து விதத்தை பார்த்து இனிவரும் போட்டிகளில் அவரை முன்கூட்டியே களமிறக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு அஸ்வின் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்கிறார். சென்னை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அவர் அசத்தியிருந்தார். அவரது அனுபவம் இந்த போட்டியில் தெரிந்தது. இனிவரும் போட்டிகளில் நிச்சயம் அஸ்வினுக்கு முன்கூட்டியே பேட்டிங் செய்ய வாய்ப்பை வழங்க இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story