அவர்களின் அருமை ஓய்வு பெற்ற பின்பே இந்தியாவுக்கு தெரியும் - தினேஷ் கார்த்திக் பாராட்டு


அவர்களின் அருமை ஓய்வு பெற்ற பின்பே இந்தியாவுக்கு தெரியும் - தினேஷ் கார்த்திக் பாராட்டு
x
தினத்தந்தி 20 Sep 2024 10:38 AM GMT (Updated: 20 Sep 2024 10:54 AM GMT)

இந்திய அணியின் டாப் ஆர்டர் சரியும் போதெல்லாம் அஸ்வின், ஜடேஜா முக்கிய ரன்கள் குவித்து காப்பாற்றியதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 56, ரிஷப் பண்ட் 39 ரன்களில் போராடி அவுட்டானார்கள்.

அதனால் 144-6 என தடுமாறிய இந்திய அணியை மிடில் ஆர்டரில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தினார்கள்.

அஸ்வின் 113 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் குவித்து அசத்தினர். வங்காளதேச அணி சார்பில் அதிகபட்சமாக ஹசன் மக்முத் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, போன்ற ஆல் ரவுண்டர்களின் அருமை அவர்கள் ஓய்வு பெற்ற பின்பே இந்தியாவுக்கு தெரியும் என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். ஏனெனில் கடந்த பல வருடங்களாக இப்படி டாப் ஆர்டர் சரியும் போதெல்லாம் அஸ்வின், ஜடேஜா முக்கிய ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றியதாகவும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அவர்கள் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. அனுபவத்தைக் கொண்டுள்ள அவர்கள் சிறப்பாகத் தொடங்கினர். அஸ்வின் முதலில் பேக் புட் பன்ச் அடித்தார். ஜடேஜா மிட் ஆன் திசையில் பவுண்டரிகளை அடித்து அசத்தினார். அந்த வகையில் சிங்கிள் மற்றும் பவுண்டரிகளை அடித்து பேட்டிங் செய்த அவர்கள் தங்களுடைய அரை சதத்தை கடந்த பின் இன்னும் கச்சிதமான சூப்பர் ஷாட்டுகளை விளையாடினர். நம்மிடம் இப்போட்டியில் விளையாடாத அக்சர் படேல் போன்ற சில ஆல் ரவுண்டர்கள் உள்ளனர்.

சில நேரங்களில் அவர்கள் அருகில் இல்லாதபோதுதான் மக்கள் அவர்களுடைய மதிப்பை உணர்வார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அஸ்வின், ஜடேஜா இருவரும் தாங்கள் செய்ததை விட மதிப்புமிக்கவர்கள். இந்திய அணிக்காக அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படுகின்றனர்" என்று கூறினார்.


Next Story