டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி தோல்விக்கு என்ன காரணம்?- டிராவிட் விளக்கம்


டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி தோல்விக்கு என்ன காரணம்?- டிராவிட் விளக்கம்
x

Image Courtesy: PTI/ twitter BCCI

இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசினார்.

அடிலெய்டு,

8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது ஆனால் இன்று எங்களுக்கான நாளாக இல்லை. முக்கிய போட்டிகளில் நிறைய ரன்கள் தான் உதவும்.

இந்த உலகக் கோப்பை தொடரில் கூட 180+ ரன்கள் அடித்த அணிகளுள் நாங்களும் ஒன்றாக இருந்தோம். இந்தப தொடரில் கூட நாங்கள் இரண்டு அல்லது மூன்று முறை அதை செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். அதனால் நன்றாக விளையாடி இருந்தோம்.

ஆனால் இன்று 15 ஓவர்கள் முடிவில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக இருந்ததாக உணர்ந்தோம். இருப்பினும் கடைசி ஐந்து ஓவர்களை நாங்கள் நன்றாக விளையாடினோம். பின்னர் இறுதியில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பார்க்கும் போது நாங்கள் 15 முதல் 20 ரன்களை விட மிகவும் குறைவாக அடித்து இருந்தோம் என்று தோன்றியது, நிச்சயமாக இந்த விக்கெட்டில் நாங்கள் 180 முதல் 185 ரன்களை எட்டியிருக்க வேண்டும். அவ்வாறு செய்து இருந்தால் போட்டியின் முடிவு மாறி இருக்கலாம் என நினைக்கிறேன்" என்றார்.


Next Story