மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்: டி.எல்.எஸ். விதிப்படி வங்காளதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி


மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்: டி.எல்.எஸ். விதிப்படி வங்காளதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
x

வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இலக்கை நோக்கி பேட்டிங் செய்தபோது மழை குறுக்கிட்டது.

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் அடித்திருந்தபோது, ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அப்போது ஆஸ்திரேலியா வெற்றி பெற 52 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. வார்னர் 53 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் மழை இடைவிடாது பெய்ததன் காரணமாக ஆட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் (டி.எல்.எஸ்.) விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. இதில் வங்காளதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 53 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Next Story