இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து முன்னிலை


இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்:  இங்கிலாந்து முன்னிலை
x

Image : ICC

2-வது நாளான நேற்று மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது

மான்செஸ்டர்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. .இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜயா டி சில்வா பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கருணாரத்னே 2 ரன்களும் , நிஷான் மதுஷ்கா 4 ரன்களும் , மேத்யூஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து குசல் மென்டிஸ் 24 ரன்களும் , சன்டிமல் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.தொடர்ந்து தனஞ்ஜெயா டி சில்வா , ரத்னநாயகே இருவரும் சிறப்பாக விளையாடினர். நிலைத்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்களும் , ரத்னநாயகே 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட் , அட்கின்சன் 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன் எடுத்தது.

2-வது நாளான நேற்று மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது . மதிய உணவு இடைவேளைக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து 67 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் டக்கெட் 18 ரன்களும் , ஆலி போப் 6 ரன்களும் ,டான் லாரன்ஸ்30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன் பிறகு பின்வரிசை ஆட்டக்காரர்கள் அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். ஜோ ரூட் (42 ரன்), துணை கேப்டன் ஹாரி புரூக் (56 ரன்), கிறிஸ் வோக்ஸ் (25 ரன்), விக்கெட் கீப்பர் ஜாமி சுமித் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. 61 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜாமி சுமித் (72 ரன்) களத்தில் உள்ளார்.

இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.


Next Story