டேரில் மிட்செல் அபார சதம்... இந்தியாவுக்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து


டேரில் மிட்செல் அபார சதம்... இந்தியாவுக்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
x

image credit: @cricbuzz

தினத்தந்தி 22 Oct 2023 12:34 PM GMT (Updated: 22 Oct 2023 12:37 PM GMT)

நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

தர்மசாலா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - நியூசிலாந்து மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே, வில் யங்க் களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்த கான்வே ரன் எதுவும் எடுக்காத நிலையில் (0) சிராஜ் பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான வில் யங்க் 27 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார். நியூசிலாந்து 8.1 ஓவரில் 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா- டேரில் மிட்செல் இருவரும் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிவந்த இருவரும், அவ்வப்போது பவுண்டரிகளையும் விரட்டினர். இதனால், நியூசிலாந்து அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது.

இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரிந்தது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ரச்சின் ரவீந்திரா, 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த டேரில் மிட்செல், சதம் அடித்து அசத்தினார்.

அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. கேப்டன் டாம் லாதம் (5), பிலிப்ஸ் (23), சாப்மேன் (6), சாண்ட்னர் (1), ஹென்றி (0), அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். சிறப்பாக விளையாடிவந்த டேரில் மிட்செல், 127 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 130 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியினர் பீல்டிங்கில் சொதப்பினர். ரச்சின் ரவீந்திரா 12 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா கோட்டை விட்டார். அதனை தொடர்ந்து, குல்தீப் யாதவ் ஓவரில் டேரில் மிட்சேல் கொடுத்த கேட்ச்சை பும்ரா தவறவிட்டார். விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலும், சிறிது கடினமான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். எனினும், ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.


Next Story