உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் இன்று மோதல்


உலகக் கோப்பை கிரிக்கெட்:  இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் இன்று மோதல்
x

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆமதாபாத்,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி அவசியமாகும்.

இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஊதித்தள்ளிய உற்சாகத்தோடு ஆமதாபாத்துக்கு வந்திருக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோரின் பேட்டிங் அபாரமாக இருந்தது. பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் கலக்கினர். இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறிவைத்து இருக்கிறார்கள். ஆனால் முந்தைய இரு ஆட்டம் போன்று இது எளிதாக இருக்காது.

டெங்கு காய்ச்சலால் முதல் இரு ஆட்டங்களை தவற விட்ட தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் குணமாகி விட்டார். அவர் 99 சதவீதம் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இதன் மூலம் கில் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவரது வருகை இந்தியாவின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும்.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இதில் இலங்கைக்கு எதிராக 345 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் சதத்தோடு 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. உலகக் கோப்பையில் துரத்திப்பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியால் பாகிஸ்தான் வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் களம் காணுவார்கள்.

அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட 30-ஐ தாண்டவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் ரன்மழை பொழியும் வேட்கையில் உள்ளார். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஷதப் கான் வலு சேர்க்கிறார்கள். 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அந்த நீண்ட சோகத்துக்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட்டுவிட வேண்டும் என்ற துடிப்புடன் காத்திருக்கிறது.

ஆமதாபாத் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன் இலக்கை நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இரவில் பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். வானிலையை பொறுத்தவரை மாலைவேளையில் லேசாக மழை குறுக்கிடலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி.


Next Story