பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த வங்காளதேசம்


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த வங்காளதேசம்
x

Image Courtesy: AFP 

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.

ராவல்பிண்டி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த ஆகஸ்ட் 30 தேதி தொடங்கியது.

இந்த போட்டிக்கான முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2வது நாள் ஆட்டத்தின் போது டாசில் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 274 ரன்னும், வங்காளதேசம் தனது முதல் இன்னிங்சில் 262 ரன்னும் எடுத்தன.

12 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆஹா சல்மான் 47 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டும், நஹித் ராணா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் பெற்ற 12 ரன் முன்னிலையுடன் சேர்த்து வங்காளதேசத்திற்கு 185 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து 185 ரன் எடுத்தால் தொடரை முழுமையாக கைப்பற்றலாம் என்ற நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய வங்காளதேசம் 56 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஜாகிர் ஹசன் 40 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வென்றது. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வங்காளதேசம் வரலாறு படைத்தது.


Next Story