ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணிக்கு 106 ரன்கள் வெற்றி இலக்கு


ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணிக்கு 106 ரன்கள் வெற்றி இலக்கு
x

image courtesy: Afghanistan Cricket Board twitter

தினத்தந்தி 27 Aug 2022 4:14 PM GMT (Updated: 27 Aug 2022 5:11 PM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது.

துபாய்,

15-வது ஆசிய கோப்பை போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் துபாயில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் முறையே 3 மற்றும் 2 ரன்களில் அவுட்டாகினர்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். அதிகபட்சமாக இலங்கை அணியில் பானுகா ராஜபக்சே 38 ரன்களும் சமிகா கருணாரத்னே 31 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் 19.4 வது ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.


Next Story