அமெரிக்கா: பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்


அமெரிக்கா:  பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்
x

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயம் அடைந்த நிலையில், அதன் வளாகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பீட்டர்ஸ்பர்க்,

அமெரிக்காவில் ரிச்மண்ட் பகுதிக்கு தெற்கே விர்ஜீனியா மாகாண பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில், 4 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென இந்த பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 4 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில், ஆயுதங்கள் வைத்திருந்தனர் என கூறி அந்த பகுதியில் இருந்த 2 பேரை போலீசார் பிடித்து சென்றனர். எனினும், துப்பாக்கி சூட்டுக்கான குற்றச்சாட்டு எதுவும் அவர்கள் மீது சுமத்தப்படவில்லை. ஒருவர் அனுமதி பெறாத துப்பாக்கியை மறைத்து வைத்திருக்கிறார். 2 பேருக்கும் 21 வயது ஆகிறது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், வளாகம் பாதுகாப்பானது என அறிவிக்கப்படும் வரை லாக்டவுன் தொடரும் என தெரிவித்து உள்ளது.

அவர்கள் இருவரும் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை. இவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story