தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 146 பேர் காயம் என தகவல்


தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 146 பேர் காயம் என தகவல்
x

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 146 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தைபே,

தீவு நாடான தைவானின் தென்கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள டைடுங் நகரில் நேற்று முன்தினம் இரவு ரிக்டர் அளவு கோலில் 6.4 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் அடுத்தடுத்து பல முறை நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 12.14 மணியளவில் டைடுங் நகரில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் பின்னர் அது 6.8 புள்ளிகளாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் டைடுங் நகரில் உள்ள சிஸ்ஹேங் என்கிற இடத்தில் பூமிக்கு அடியில் 7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஒட்டு மொத்த தைவானும் அதிர்ந்தது. தலைநகர் தைபே உள்பட நாட்டின் பல நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதாகவும், சாலைகள், பாலங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யூலி நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக தைவான் மற்றும் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 146 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன


Next Story