தென்கொரியாவை அசுர வேகத்தில் தாக்கும் ஹின்னம்னோர் புயல் நாளை கரையை கடக்கும்


தென்கொரியாவை அசுர வேகத்தில் தாக்கும் ஹின்னம்னோர் புயல் நாளை கரையை கடக்கும்
x
தினத்தந்தி 5 Sep 2022 6:38 AM GMT (Updated: 5 Sep 2022 6:43 AM GMT)

இந்த ஆண்டின் சக்திவாய்ந்த புயலாக கருதப்படும் ஹின்னம்னோர் ஜப்பான், தைவான், சீனா, தென்கொரியா போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சியோல்,

மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. "ஹின்னம்னோர்" என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஜப்பான் மற்றும் சீனாவின் கிழக்கு பகுதிகளை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் சக்திவாய்ந்த புயலாக கருதப்படும் ஹின்னம்னோர் வடக்கே நகர்ந்து ஜப்பான், தைவான், சீனாவின் கிழக்கு பகுதி, தென்கொரியா போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 175 கி.மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்று ஹாங்காங் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹின்னம்னோர் புயல், கிழக்கு சீனக்கடலில் வடக்கு நோக்கி படிப்படியாக நகர்ந்து வருகிறது.

ஹின்னம்னோர் புயல் படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து தென் கொரியாவின் தெற்கு தீவான ஜெஜு கடற்பரப்பை அடைந்துள்ளது.

புயலால், கொரிய தீபகற்பத்திலும் கனமழை கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கொரிய தீபகற்ப பகுதியில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிகாலை 5 மணி நிலவரப்படி, புயல் ஜெஜூவின் சியோக்விபோவில் இருந்து 550 கிமீ தென்-தென்மேற்கில் அமைந்துள்ளது, மணிக்கு 22 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்கிறது, முன்பு கணித்ததை விட மிக வேகமாக புயல் நகர்ந்து வருகிறது என கொரியா வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளை காலை 9 மணியளவில் தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு வட-வடமேற்கில் 80 கி.மீ தொலைவில் அதிவேகத்தில் புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக செவ்வாய்க்கிழமை வரை நாடு முழுவதும் பலத்த காற்று மற்றும் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

அதிவேக காற்று மற்றும் சுனாமி போன்ற மிக உயரமான அலைகள் கடலோர பகுதிகளில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.கொரியன் ஏர்லைன்ஸ்,ஏர் சியோல், ஜின் ஏர் மற்றும் ஏசியானா ஏர்லைன்ஸ் ஆகியவை திங்கள்கிழமை ஜெஜு தீவுக்குச் செல்லும் பெரும்பாலான விமானங்களை ரத்து செய்துள்ளன.

குவாங்ஜு, பூசன், டேகு மற்றும் உல்சான் உள்ளிட்ட தெற்கு நகரங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் நேற்று அதிகாரிகளை சந்தித்து முன்னெச்சறிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்தார். முடிந்த அளவுக்கு சேதாரத்தை குறைக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story