ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; 120 பேர் உயிரிழப்பு


ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; 120 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 Oct 2023 8:26 PM GMT (Updated: 8 Oct 2023 6:04 AM GMT)

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 8 முறை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி 120 பேர் உயிரிழந்து உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 8 முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றி ஹெராத் மாகாண பேரிடர் நிவாரண அதிகாரி மூசா ஆஷாரி கூறும்போது, நிலநடுக்கத்திற்கு 120 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார். இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக, நகரில் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன.

உயர்ந்த கட்டிடங்களில் இருந்து பலர் அலறியடித்தபடி வெளியேறி, தெருவில் தஞ்சமடைந்தனர். இதில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜூனில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.


Next Story