காசாவில் சிக்கிய 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்பு


காசாவில் சிக்கிய 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்பு
x

காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்பியவர்கள் வெளியேறி வந்து விட்டனர் என நான் உறுதி கூற முடியும் என்று ஜான் கிர்பை கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. அந்நாட்டின் எல்லை வழியே உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது. இதில், இஸ்ரேலை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. இதற்காக தொடர்ந்து காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.

7 மாதங்களுக்கு கூடுதலாக நடந்து வரும் இந்த மோதலில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார்.

இந்த சூழலில், காசா பகுதியின் ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லை பகுதி மூடப்பட்டது. இதனால், வெளிநாட்டவர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை கூறும்போது, 20 அமெரிக்க டாக்டர்கள் காசாவில் சிக்கி இருந்தனர். அவர்களில் 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்கப்பட்டு விட்டனர். அவர்கள் அனைவரும் வெளியேற விருப்பம் தெரிவித்தனர். மற்ற 3 பேரை பற்றி நான் பேசமாட்டேன்.

ஆனால், காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்பியவர்கள் வெளியேறி வந்து விட்டனர் என நான் உறுதி கூற முடியும் என்று கூறியுள்ளார்.

ரபா பகுதியை கடந்த வாரம் இஸ்ரேலின் ராணுவம் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ரபா எல்லையை கடந்து செல்லும் பகுதி மூடப்பட்டது.

இந்த பகுதியின் வழியேதான் வெளிநாட்டில் இருந்து உதவிகளை மேற்கொள்வதற்கான பணிகளுக்கான ஊழியர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் முடியும். இந்த பகுதியை மீண்டும் திறப்பதற்கான இஸ்ரேல் மற்றும் எகிப்து அதிகாரிகள் இடையேயான ஒப்பந்தம் நிறைவேறாமல் தோல்வியில் உள்ளது.


Next Story