பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய பொருளாதாரம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது - புதின் பாராட்டு


பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய பொருளாதாரம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது - புதின் பாராட்டு
x
தினத்தந்தி 28 Oct 2022 2:38 AM GMT (Updated: 28 Oct 2022 2:55 AM GMT)

நாட்டின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் திறன் கொண்டவர் பிரதமர் மோடி என பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என ரஷிய அதிபர் புதின் பாராட்டியுள்ளார்.

மாஸ்கோவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று பேசினார்.

அதில் அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடியின் தலைமையில் நிறைய செய்யப்பட்டுள்ளது. அவர் (பிரதமர் மோடி) தனது நாட்டின் தேசபக்தர். 'மேக் இன் இந்தியா' என்ற அவரது திட்டம் பொருளாதார ரீதியாகவும் நெறிமுறையிலும் மிக முக்கியமானது. அதன் எதிர்காலம் இந்தியாவுக்கே சொந்தம், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொள்ளலாம்.

உள்நாட்டில் சில தடுப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் தனது நாட்டின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் திறன் கொண்டவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர்.

பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்து நவீன நாடாக மாறியுள்ள இந்தியா வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்திய மக்கள் மற்றும் உறுதியான வளர்ச்சியே, அனைவருக்கும் இந்தியா மீதான மரியாதை மற்றும் அபிமானத்தை வழங்குகின்றன.

இந்தியாவுடன் எங்களுக்கு (ரஷியாவிற்கு) சிறப்பான உறவு உள்ளது. இது பல தசாப்தங்களாக நெருங்கிய நட்பால் உருவாக்கப்பட்டது. நாங்கள் ஒருபோதும் கடினமான சிக்கல்களை எதிர்கொண்டதில்லை, ஒருவருக்கொருவர் ஆதரவளித்தோம், அது இப்போது நடக்கிறது. எதிர்காலத்தில் இது நடக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது, நாங்கள் வர்த்தக அளவை அதிகரித்துள்ளோம். இந்திய விவசாயத்திற்கு மிகவும் முக்கிய உரங்களின் விநியோகத்தை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன் அளவை 7.6 மடங்கு அதிகரித்துள்ளோம். விவசாய வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு புதின் தெரிவித்துள்ளார்.


Next Story