இஸ்ரேலில் பாலஸ்தீன பயங்கரவாதி சுட்டுக்கொலை
இஸ்ரேலில் பாலஸ்தீன பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெருசலேம்,
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிக்கும் சூழலில் அண்மை காலமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலில் தொடர்ச்சியாக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை ஒடுக்க இஸ்ரேல் ராணுவம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேல் வீரர்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசி எறிந்ததாக தெரிகிறது. அதை தொடர்ந்து இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முகமது மரேய் என்கிற 25 வயது பாலஸ்தீன பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.