மெக்சிகோவில் முதல்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு!


மெக்சிகோவில் முதல்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு!
x

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் மெக்சிகோ சென்றுள்ளனர்.

மெக்சிகோ சிட்டி,

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மெக்சிகோ சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் அங்கு இருநாட்டு உறவு குறித்து விவாதித்தனர்.

மெக்சிகோவில் முதல்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார்.

அப்போது சுவாமி விவேகானந்தரின் மனித நேயத்திற்கான கல்வி, புவியியல் தடைகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது என்று ஓம் பிர்லா கூறினார்.

இது குறித்து ஓம் பிர்லா வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், "மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன். லத்தீன் அமெரிக்காவில் சுவாமிஜியின் முதல் சிலை இதுவாகும்.

இச்சிலை மக்களுக்கு, குறிப்பாக இப்பகுதி இளைஞர்களுக்கு, மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் உத்வேகமாக இருக்கும்.நமது நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

'சுவாமிஜியின் செய்தி மற்றும் மனிதகுலத்திற்கான போதனைகள் புவியியல் கட்டுப்பாடுகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது.அவரது செய்தி முழு மனித குலத்திற்கும் உள்ளது.இன்று மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைத்து அவருக்கு பணிவான அஞ்சலி செலுத்துகிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மெக்சிகோ நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இந்திய-மெக்சிகோ நட்புறவு பூங்காவை மக்களவை சபாநாயகர் திறந்து வைத்தார்.

மெக்சிகோவில் உள்ள சாப்பிங்கோ பல்கலைக்கழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர் பாண்டுரங் கான்கோஜியின் சிலையை வெள்ளிக்கிழமை ஓம் பிர்லா திறந்து வைத்தார். லத்தீன் அமெரிக்காவின் பழமையான விவசாயப் பல்கலைக்கழகமான சாப்பிங்கோ பல்கலைக்கழகத்தையும் பிர்லா பார்வையிட்டார்.

மெக்சிகோவின் சாண்டியாகோ க்ரீலில் உள்ள பிரதிநிதிகள் சபையின் தலைவரை பிர்லா சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

இந்தியாவும் மெக்சிகோவும் வரலாற்று ரீதியாக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதையும், 1947 இல் இந்தியாவை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடு மெக்சிகோ என்பதையும் ஓம் பிர்லா தெரிவித்தார்.


Next Story