ஈரான் டிரோன்கள் மூலம் உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷியா...!


ஈரான் டிரோன்கள் மூலம் உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷியா...!
x

ஈரானில் இருந்து ‘கமிஹாசி’ என்ற ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷியா வாங்கியுள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 237-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

போரில் கைப்பற்றிய உக்ரைனின் சில நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதனை தொடர்ந்து போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.

ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் போரின் போக்கு 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாகி வருகிறது.

இதனிடையே, உக்ரைனுடனான போரில் பயன்படுத்த ஈரானிடமிருந்து ரஷியா ஆளில்லா டிரோன்களை வாங்கியதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால், அதை ரஷியாவும், ஈரானும் உறுதிபடுத்தாமல் இருந்தது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா இன்று தாக்குதல் நடத்தியது. ஆளில்லா டிரோன் விமானங்கள் மீதும் ஏவுகணை, வெடிபொருட்களை ஏவி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. கீவ் மீது தாக்குதல் நடத்த ரஷியா பயன்படுத்திய டிரோன் விமானங்கள் ஈரானில் இருந்து வாங்கப்பட்ட 'கமிஹாசி' டிரோன் விமானங்கள் என்பது தெரியவந்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈரானில் இருந்து வாங்கிய டிரோன் விமானங்களை ரஷியா பயன்படுத்தியது இதுவே முதல்முறையாகும். ஈரானிடமிருந்து வாங்கிய டிரோன்களை ரஷியா பயன்படுத்துவதால், உக்ரைனுக்கு ஆதரவாக இஸ்ரேல் செயல்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் - ரஷியா இடையேயான மோதல் மேற்கத்திய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல நாடுகளை போர் வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதால் 3-ம் உலகபோருக்கான ஆபத்து ஏற்பட்டுள்ளது.


Next Story