கிரிமியா பாலம் மீது மீண்டும் தாக்குதல்; 2 பேர் பலி - அதிகரிக்கும் பதற்றம்


கிரிமியா பாலம் மீது மீண்டும் தாக்குதல்; 2 பேர் பலி - அதிகரிக்கும் பதற்றம்
x

Image Courtesy: AFP

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.

மாஸ்கோ,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 509வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷியா தன் நாட்டோடு இணைத்துக்கொண்டது. உக்ரைனுடனான போரில் கிரிமியாவில் இருந்து ரஷிய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷியாவையும் கிரிமியாவையும் கிரிச் பாலம் இணைக்கிறது.

அதேவேளை, 19 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் ரெயில், சாலை போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக உக்ரைன், ரஷியா மாறி மாறி குற்றஞ்சாட்டிக்கொண்டன. அதன் பின்னர் பாலத்தை ரஷியா மீண்டும் சரி செய்து வாகனப்போக்குவரத்தை தொடர்ந்தது.

இந்நிலையில், ரஷியா - கிரிமியா இணைப்பு பாலம் கிரிச் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் பாலம் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலால் பாலத்தின் மீதான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாலம் வழியாக ரஷியா ராணுவத்திற்கு தேவையான பொருட்களை அனுப்பப்பட்டு வந்ததால் அந்த நடவடிக்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story