காசாவை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பது நல்லதல்ல: வெள்ளை மாளிகை


காசாவை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பது நல்லதல்ல:  வெள்ளை மாளிகை
x

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது என்பது ஒரு பெரிய தவறாகி விடும் என கடந்த மாதம் பேசும்போது அமெரிக்க அதிபர் பைடன் குறிப்பிட்டார்.

வாஷிங்டன்,

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.

ஹமாஸ் அமைப்பின் அதிரடி தாக்குதலில், 1400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 241 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றுள்ளது என இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து இருதரப்பினர் இடையே நடந்து வரும் மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, போர் முடிந்ததும் காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கான பொறுப்பை, காலவரையின்றி வைத்திருப்பது பற்றி இஸ்ரேல் அரசு பரிசீலிக்க கூடும் என கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், காசாவை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பது என்பது நல்லதல்ல என அதிபர் நினைக்கிறார். அது இஸ்ரேலுக்கோ அல்லது இஸ்ரேல் மக்களுக்கோ நல்லதல்ல என கூறியுள்ளார்.

நெதன்யாகு பேசும்போது, போர் முடிந்ததும், வருங்காலத்தில் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காசா முனை பகுதியில் பாதுகாப்பை கவனிக்க வேண்டிய தேவை இஸ்ரேலுக்கு உள்ளது என்று கூறினார். ஹமாஸ் அமைப்பின் வழிகளை தொடர்ந்து பின்பற்ற விரும்பாதவர்களால் காசா பகுதி ஆட்சி செய்யப்பட வேண்டும் என கூறினார்.

இதுபற்றி கிர்பை கூறும்போது, அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கன் நடத்திய பேச்சுவார்த்தைகள், மோதலுக்கு பின் காசா எப்படி தோற்றமளிக்கும்? காசாவில் ஆட்சிமுறை எப்படி இருக்கும்? என்பது பற்றி இருந்தது. ஏனெனில், அது எப்படியிருப்பினும், அக்டோபர் 6-ந்தேதிக்கு முன் இருந்தது போன்று இருக்க முடியாது. அது ஹமாஸ் அமைப்பினராக இருக்காது என கூறியுள்ளார்.

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது என்பது ஒரு பெரிய தவறாகி விடும் என கடந்த மாதம் சி.பி.எஸ். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, பைடன் குறிப்பிட்டார். எனினும், அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் ஹெர்ஜாக் அப்போது கூறும்போது, சண்டை முடிந்ததும் காசாவை ஆக்கிரமிக்கும் நோக்கம் இஸ்ரேலுக்கு இல்லை என கூறினார்.


Next Story