இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கி சூடு; பாலஸ்தீனிய வாலிபர் உயிரிழப்பு


இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கி சூடு; பாலஸ்தீனிய வாலிபர் உயிரிழப்பு
x

இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பாலஸ்தீனிய வாலிபர் உயிரிழந்து உள்ளார்.

ரமல்லா,



பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரின் கிழக்கே சில்வாத் என்ற கிராமத்திற்குள் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கடந்த வெள்ளி கிழமை புகுந்தனர். அவர்களுக்கும், 20க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய வாலிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் முகமது ஹமீது என்ற வாலிபர் பலத்த காயமடைந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை வீரர்கள் கைது செய்தனர். அதன்பின்னர் ஹமீது, இஸ்ரேலிய மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாலஸ்தீனிய அதிபர் முகமது அப்பாஸ் தலைமையிலான கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. அதனுடன் பாலஸ்தீனத்தில் இன்று பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளது.

எனினும் இஸ்ரேலிய வீரர்கள் தரப்பில், ரமல்லா நகர் அருகே சாலையில் பொதுமக்கள் மீது சில பாலஸ்தீனியர்கள் பெரிய கற்களை வீசினர். அதனை நிறுத்தும்படி அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால், சந்தேகத்திற்குரிய நபர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடைசியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story