லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் குண்டுமழை


லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் குண்டுமழை
x

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது.

பெரூட்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும், ஹிஸ்புல்லா தாக்குதலால் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ராணுவ நடவடிக்கை மூலமாகவும் இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்திவரும் பேஜர்கள் மர்மமான முறையில் ஒரேநேரத்தில் வெடித்து சிதறின. அதற்கு அடுத்தநாள் வாக்கிடாக்கிகளும் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் மொத்தம் 37 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் பின்னணியில் உள்ளதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக லெபனானின் பெரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் மற்றும் ஹிஸ்புல்லா படையின் ராட்வான் பிரிவை சேர்ந்த பயங்கரவாதிகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் இன்று குண்டுமழை பொழிந்து வருகிறது. வடக்கு பகுதியில் இருந்து வெளியேறிய குடிமக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த ராணுவ நடவடிக்கையே தீர்வு என இஸ்ரேல் கருதுவதால் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோஷ், கசிமீர், பசொரியா, அல் டயாப் உள்பட பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் இன்று குண்டுமழை பொழிந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறும்படி பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், லெபனானில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story