கனடாவில் காலிஸ்தான் ஓட்டெடுப்பு; இந்தியா கடும் எதிர்ப்பு


கனடாவில் காலிஸ்தான் ஓட்டெடுப்பு; இந்தியா கடும் எதிர்ப்பு
x

அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த உள்ளதாக நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டுமென சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு போராடி வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த அமைப்பு பஞ்சாப்பை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மாதம் 18-ந்தேதி பொது வாக்கெடுப்பு நடத்தியது. இதை இந்தியா வன்மையாக கண்டித்தது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த உள்ளதாக நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இந்திய எதிர்ப்பு சக்திகளின் வாக்கெடுப்பு என்று அழைக்கப்படும் இதற்கு எங்களின் எதிர்ப்பு அனைவரும் அறிந்ததே. இது கனடா அரசிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நாங்கள் முன்பே பொதுவில் பகிர்ந்துள்ளோம். நாங்கள் இங்கே டெல்லியில் உள்ள கனடா தூதரிடம், கனடாவில் நடக்கும் இந்த வாக்கெடுப்பு பற்றிய எங்களின் கவலைகளை எடுத்துரைத்தோம். இந்தியா, கனடா மற்றும் பிற இடங்களில் இந்த பிரச்சினைகளை நாங்கள் தொடர்ந்து எடுத்துச்செல்வோம்" என கூறினார்.


Next Story