கிழக்கு சீனாவை தாக்கும் சக்திவாய்ந்த ஹின்னம்னோர் புயல்; சீனா, தைவான், ஜப்பான், கொரியாவில் கனமழை!


கிழக்கு சீனாவை தாக்கும் சக்திவாய்ந்த ஹின்னம்னோர் புயல்; சீனா, தைவான், ஜப்பான், கொரியாவில் கனமழை!
x

Image Credit:weather.com

தினத்தந்தி 4 Sep 2022 7:18 AM GMT (Updated: 4 Sep 2022 7:37 AM GMT)

இந்த ஆண்டின் மிகப்பெரிய புயலாக கிழக்கு சீனக் கடலில் ஹின்னம்னோர் புயல் உருவாகியுள்ளது.

டோக்கியோ,

உலக அளவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய கிழக்கு சீனக் கடலில் ஹின்னம்னோர் புயல் உருவாகியுள்ளது. ஹின்னம்னோர் புயல் படிப்படியாக வடக்கு நோக்கி கிழக்கு சீனக் கடலில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த ஹின்னம்னோர் புயல் சீனாவின் அண்டை நாடுகளான தைவான், ஜப்பான் மற்றும் கொரியாவையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் தேசிய வானிலை மையம் இன்று காலை 10 மணிக்கு மஞ்சள் அலெர்ட் புயல் எச்சரிக்கையை வெளியிட்டது. வடகிழக்கு ஜெஜியாங், ஷாங்காய் மற்றும் தைவானில் கனமழை பெய்யும் என சீனாவின் தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கப்பல்கள் துறைமுகத்திற்குத் திரும்பும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனால் முன்னெச்சரிக்கையாக கிழக்கு சீனாவில் உள்ள நகரங்கள் படகு சேவையை நிறுத்தி வைத்துள்ளன.

கிழக்கு சீனாவில் உள்ள நகரங்கள் வென்ஜோவ், ஷாங்காய் நகரில் மீட்புப் பணிகளில் 50,000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பள்ளிகளும் மூடபட்டுள்ளன.

ஹாங்காங் வானிலை ஆய்வகத்தின் படி, இந்த சூறாவளியால் மணிக்கு அதிகபட்சமாக 175 கிமீ (109 மைல்) வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


ஜப்பானின் ஒகினாவாவில் விமானங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் இந்த புயலால் கொரிய தீபகற்பத்தில் கனமழை பெய்யும் என்றும், இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

தைவானில், நியூ தைபே, தாயுவான் மற்றும் சிஞ்சு மாவட்டங்களில் வசிக்கும் 600க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள தங்குமிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த புயலால் தைவானின் மியோலி மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, மேலும் சுமார் 100 சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கனமழை பெய்து வருகிறது.

அந்நாட்டு போக்குவரத்து மற்றும் தொடர்பு அமைச்சகத்தின் படி, தைவான் முழுவதும் சுமார் 40 விமானங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட படகு சேவைகளும் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


Next Story