இஸ்ரேல் மீது 200 ராக்கெட்டுகளை ஏவிய ஹிஸ்புல்லா


இஸ்ரேல் மீது 200 ராக்கெட்டுகளை ஏவிய ஹிஸ்புல்லா
x

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.

ஜெருசலேம்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் முக்கிய தளபதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி முதல் அடிக்கடி ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏவுகணை, ராக்கெட், டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் மீது நேற்று இஸ்ரேல் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 492 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானப்படைத்தளம் , நாசரேத் நகரம், மஹிடோ விமானப்படைத்தளம், ஹைபா, அப்லா போன்ற நகரங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த ராக்கெட்டுகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் தடுத்து நிறுத்தி அழித்தது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


Next Story