உக்ரைனில் இனப்படுகொலை... ஐ.நா. பொது சபையில் ரஷியா மீது ஜெலன்ஸ்கி ஆவேசம்


உக்ரைனில் இனப்படுகொலை... ஐ.நா. பொது சபையில் ரஷியா மீது ஜெலன்ஸ்கி ஆவேசம்
x
தினத்தந்தி 20 Sep 2023 1:23 AM GMT (Updated: 20 Sep 2023 1:47 AM GMT)

உக்ரைனில் இனப்படுகொலையில் ரஷியா ஈடுபட்டு உள்ளது என 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

நியூயார்க்,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது தொடர்ந்து, ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். தூதரக அளவிலான அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. எனினும் போரானது நிற்காமல் தொடருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ரஷியாவில் உள்ள உக்ரைனிய குழந்தைகளை திரும்ப சொந்த நாட்டுக்கு கொண்டு வர நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால், காலம் கடந்து செல்கிறது.

ரஷியாவில் உள்ள அந்த குழந்தைகளுக்கு உக்ரைனை வெறுக்கும்படி கூறப்படுகிறது. அவர்களுடைய குடும்பத்தினருடனான உறவுகள் முறிகின்றன. இது தெளிவாக ஒரு இனப்படுகொலை என்று பேசியுள்ளார்.

ரஷியாவுடன் பகைமை தொடர்ந்தபோதிலும், அமைதி திட்டம் பற்றி ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். அவர் கூட்டத்தொடரில் தொடர்ந்து பேசும்போது, நவீன வரலாற்றில் முதன்முறையாக, தாக்குதலுக்கு உள்ளான தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உண்மையில் ஒரு வாய்ப்பு எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

சவுதி அரேபியா கடந்த மாதம் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், ரஷிய ஆக்கிரமிப்பால் மீறப்பட்ட, சர்வதேச விதிகளின் அடிப்படையிலான ஒழுங்குமுறையை மீட்டெடுப்பதற்கான அமைதி திட்டம் ஒன்றை நாங்கள் முன்மொழிகிறோம் என்று பேசினார். ஒற்றுமையே, இதுபோன்ற படையெடுப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்யும் என்று அவர் பேசினார். இதனை 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் அவர் கூறினார்.


Next Story