ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 4-வது முறையாக நிலநடுக்கம்


ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 4-வது முறையாக நிலநடுக்கம்
x

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ரிக்டரில் 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கடந்த 7-ந்தேதி ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 4 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்து விட்டன என தலிபான் அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இதுபற்றி அந்நாட்டு பேரிடர் மேலாண் அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், 20 கிராமங்களில் இருந்த 1,983 குடியிருப்பு வீடுகள் அழிந்து விட்டன என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து கடந்த 11-ந்தேதி ரிக்டரில் 6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

அதன்பின்னர், 13-ந்தேதி ரிக்டரில் 4.6 அளவிலான நிலநடுக்கமும், 15-ந்தேதி ரிக்டரில் 5.4 அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த மாதத்தில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.


Next Story