சீன நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு


சீன நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு
x

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வடைந்து உள்ளது.

பீஜிங்,



சீனாவில் கொரோனா பாதிப்புகள், வெப்ப அலை பரவல் ஆகியவற்றால் மக்கள் ஒருபுறம் தவித்து வரும் சூழலில் அந்நாட்டின் தென்மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சிக்குட்பட்ட லூடிங் கவுன்டி பகுதியில் கடந்த திங்கட் கிழமை மதியம் 12.52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 6.8 ஆக பதிவானது. இதனால், பல பகுதிகளில் நில சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. நில சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

நிலநடுக்கத்திற்கு பின்னர் அருகேயுள்ள பல பகுதிகளில் தொடர் அதிர்வுகளும் உணரப்பட்டு உள்ளன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் ரிக்டரில் 3.0 அளவிலான மொத்தம் 10 நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. நிலநடுக்கம் எதிரொலியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு விதித்த தடையை அடுத்து 2.1 கோடி மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனை தொடர்ந்து, இந்த பகுதியில் அதிகாரிகள் பல பசுமை வழிகளை ஏற்படுத்தி, மீட்பு பணியாளர்கள் லூடிங் பகுதிக்கு செல்வதற்கு ஏற்ற வகையில் வழி ஏற்படுத்தி தந்துள்ளனர்.

நிவாரண பணி மேற்கொள்ள வசதியாக விரைவு சாலை வழியே செல்ல 700 சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1,900-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆயுத போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நிலநடுக்கம் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இவற்றில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி பகுதியில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர். 14 பேரை காணவில்லை. 170 பேர் காயமடைந்து உள்ளனர் என நேற்றிரவு தகவலின்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நிலநடுக்கத்திற்கு மொத்த உயிரிழப்பு 74 ஆக உயர்வடைந்து உள்ளது.

சீன அதிபர் ஜின்பிங், உயிர்களை காப்பதிலும் மற்றும் உயிரிழப்புகள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான அனைத்து வித நிவாரண முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி அதிகாரிகளை கேட்டு கொண்டுள்ளார்.

சீனாவின் செஞ்சிலுவை சங்கம் அமைப்பு அவசரகால நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூடாரங்கள், நிவாரண தொகுப்புகள், மடிப்பு படுக்கைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக பணியாளர் குழு ஒன்றையும் அந்த அமைப்பு அனுப்பி வைத்து உள்ளது.

நிலநடுக்கம் பாதித்த பகுதியிலுள்ள 22 ஆயிரம் வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், நிலைமை சீர் செய்யப்பட்டு உள்ளது.


Next Story