பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்: இந்தியாவில் வாழும் கனடா மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை


பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்: இந்தியாவில் வாழும் கனடா மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை
x

Image Courtesy: THE CANADIAN PRESS

இந்தியாவில் வாழும் கனடா மக்கள் கவனமாக இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒட்டாவா,

கனடாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களை இந்தியா தடை செய்த அமைப்புகளாக அறிவித்துள்ளது.

அதேவேளை, பஞ்சாப்பில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக காலிஸ்தான் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கடந்த 2020ம் ஆண்டு பயங்கரவாதியாக அறிவித்தது. பயங்கரவாதி ஹர்தீப் சிங் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். மேலும், கனடாவில் இருந்தவாறு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனிடையே, கடந்த ஜூன் 18ம் தேதி கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா நகரில் சீக்கிய மத வழிபாட்டு தலம் அருகே ஹர்தீப் சிங் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இம்மாத தொடக்கத்தில் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜெஸ்டின் டிரூடோ இந்தியா வருகை தந்தார். அவர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டுமென டிரூடோவிடம் பிரதமர் மோடி கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். இது இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

மோதல் முற்றிய நிலையில் கனடா வர்த்தகத்துறை மந்திரியின் இந்திய பயணமும் ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் கனடா நாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின், கனடா குடியுரிமை பெற்ற ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறி பரபரப்பை கிளப்பினார். ஆனால், கனடா பிரதமரின் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கனடாவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்ட அதிகாரி இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' உளவுப்பிரிவின் உயர் அதிகாரி பவான்குமார் என்பது தெரியவந்துள்ளது.

கனடாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக கனடா நாட்டு தூதரக உயர் அதிகாரி 5 நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவில் வாழும் கனடா மக்கள் கவனமாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கனடா அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் கனடா நாட்டு குடிமக்கள் இந்தியாவில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். அனைத்து நேரமும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையின்றி இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும். உங்கள் பாதுகாப்பிற்கு ஆபத்து இருப்பதால் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன் இந்தியா கட்டாயம் செல்ல வேண்டுமா என்பதை மீண்டும் யோசனை செய்து முடிவெடுங்கள். நீங்கள் ஏற்கனவே இந்தியாவில் இருந்தால் அங்கு கட்டாயம் இருக்க வேண்டுமா என்பதை மறு யோசனை செய்துகொள்ளுங்கள். பாதுகாப்பு நலன் கருதி இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டுமென நினைத்தால் அது குறித்து முடிவெடுங்கள்.

கணிக்க முடியாத பாதுகாப்பு சூழ்நிலை நிலவி வருவதாலும், பயங்கரவாத அச்சுறுத்தல், பொதுமக்கள் போராட்டம், பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக நாட்டு குடிமக்கள் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.


Next Story