கத்தாரில் 29 நாய்கள் சுட்டுக் கொலை - பொதுமக்கள் கடும் கண்டனம்
கத்தாரில் 29 நாய்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோஹா,
கத்தார் தலைநகர் தோஹா அருகே 29 நாய்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தோஹா அருகே உள்ள தொழிற்சாலை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் இந்த பகுதிக்குள் சில நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அவர்களை பாதுகாவலர்கள் தடுத்த போது, துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் சரமாரியாக நாய்களை சுட்டுத் தள்ளினர். இதில், குட்டி நாய்கள் உள்ளிட்ட 29 நாய்கள் பரிதாபமாக இறந்தன. பல நாய்கள் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தன. இந்த தகவலை அந்த நாட்டின் மீட்பு தொண்டு நிறுவனமான பாவ்ஸ் தெரிவித்துள்ளது.
சுட்டு கொல்லப்பட்ட நாய்களில் ஒன்று தங்கள் மகன் ஒருவரை கடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தியதாக அந்த கும்பல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அங்குள்ள பொதுமக்களும் இணையவாசிகளும் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.