சூடானில் நிலத்தகராறு காரணமாக வன்முறை - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!


சூடானில் நிலத்தகராறு காரணமாக வன்முறை - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!
x
தினத்தந்தி 22 Oct 2022 3:32 PM GMT (Updated: 23 Oct 2022 12:46 PM GMT)

சூடான் நாட்டில் சில குழுக்களுக்கு இடையே நிலம் பகிர்வில் மோதல் ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.

ஆட்-டமாசின்(சூடான்),

சூடான் நாட்டின் தெற்கே புளூ நைல் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில், ஹவுசா பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் பகிர்வில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

ஹவுசா பிரிவு மக்கள் புளூ நைல் பகுதியில் கடைசியாக வந்து குடியேறிய குழுவாக இருந்ததால், பழங்குடியினர் சட்டம் அவர்களை சொந்தமாக நிலம் வைத்திருப்பதை தடை செய்கிறது. இந்நிலையில், பழங்குடியினர் சட்டத்தால் தங்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து ஹவுசா பிரிவு மக்கள் குழு சூடான் முழுவதும் அணிதிரண்டுள்ளது.

தலைநகர் கார்ட்டூம் நகரில் இருந்து தெற்கே 500 கி.மீ. தொலைவில் உள்ள ரோசிரெஸ் பகுதியருகே, வத் அல்-மஹி என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டு உள்ளது.புளூ நைல் மாகாணம் எத்தியோப்பியா மற்றும் தெற்கு சூடானின் எல்லையை ஒட்டி உள்ளது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் நேற்று தீவிர துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியும், வீடுகளுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த மோதலில், நேற்றும் இன்றும் என இரண்டு நாட்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளது. பலர் வன்முறையில் காயமடைந்து உள்ளனர். இதனை அல்-மஹி பகுதியில் உள்ள மருத்துவமனையின் தலைவரான அப்பாஸ் மவுசா உறுதிப்படுத்தி உள்ளார்.

வாட் அல்-மஹி பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் இருநூறு பேர் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து, கவர்னர் அஹ்மத் அல்-ஓம்டா பாடி, புளூ நைல் மாகாணத்திம் முழுவதும் 30 நாட்களுக்கு அவசரகால நிலையை பிறப்பித்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story